Wednesday, August 6, 2014

புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகளின் துவக்கம் !!!



முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். 


மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.



இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணிய மிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள்.



இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகள்,அல்லது உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,மார்க்க கல்வியை வழங்கினால், 


இன்ஷா அல்லாஹ் பெருமானாரின் ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியை வழங்கிய உயர்ந்த பெற்றோர்களாக வல்ல அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன். 

இன்ஷா அல்லாஹ் அரபுக் கல்லூரிகள்; ஷவ்வால் பிறை 15-ல் துவங்க இருக்கிறது பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நல் உதவி செய்வானகவும் ஆமீன்.. வஸ்ஸலாம்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Sunday, August 3, 2014

Saturday, August 2, 2014

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் ஷைகுல் ஹதீஸ் அபுல் பயான் எ.இ.அப்துர் ரஹ்மான் ஹழரத் அவர்களின் உருக்கமான உரை!


அக்பர் பாதுஷாவை அப்துஷ் ஷகூராக்கியவர் அண்ணல் நபியின் பேரர் ஹுஸைன் (ரலி) வழியில் வந்த தாஜுஷ் ஷரீஅத் ஷம்சுல் ஹுதா ஹழரத் (ரஹ் ) அவர்கள்.ஷெய்குல் ஹதீஸ் ஹழரத் கிப்லா உருக்கம்.

இனிய ஈதுப் பெருநாளின் மாலை நேரத்தில் மனதை கனக்கவைக்கும் செய்தியாக ஆவூர் அப்துஷ் ஷகூர் ஹழரத் மவ்த் செய்தி வந்துவிட்டது.

அன்று இரவு என் இனிய நண்பர்களில் ஒருவரான மவ்லவி அஹ்மது ஷாஹ் ஹசனியுடன் ஆவூருக்குப் பயணமானேன். 


புதன்கிழமை லுஹருக்குப் பின் நல்லடக்கமும் தொடர்ந்து இரங்கல் 
கூட்டமும் நடந்தது., 

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் ஷெய்குல் ஹதீஸ் அப்துர் ரஹ்மான் ஹழரத் தலைமையேற்று பேசியதில் இருந்து சுவராசியம் நிறைந்த ஒரு பகுதி..

நான் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு என் சொந்த தம்பியாகவே என்னுடன் பழகியவர் அப்துஷ்ஷகூர் ஹழரத். அவர் ஆலிமிற்காக ஒதுவதற்கு முதலில் திருநெல்வேலி பேட்டை ரியாலுல் ஜினான் அரபிக் கல்லூரிக்கு வந்தார்.

ஒரு ஜும்ஆ நாளன்று வந்த அப்துஷ் ஷகூர் ஹஸரத் நேரடியாக நிர்வாகிக்ளைச் சந்தித்து ஜும்ஆ உரையாற்ற அனுமதிகேட்டு வாங்கிவிட்டார். அழகான தமிழில் ஜும்ஆ உரையாற்றி அனைவரையும் கவர்ந்து விட்டார்.

அந்த அரபிக்கல்லூரியில் அன்று தேர்வு வைத்துதான் மாணவர்களைச் சேர்ப்பார்கள் இவரது உரையக்கேட்ட நிர்வாகிகள் அவரை மாணவராகச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்தனர். ஒதப்போகும் போதே ஜும்ஆவில் பேசி மாணவராகச் சேர்ந்தவர் நம் ஆவூரார்.

அதுவும் அக்கல்லூரியில் நான்காம் ஜும்ராவிலிருந்துதான் பாடங்கள் இருந்தன. இவரைச் சேர்க்கவேண்டும் என்பதற்காகவே அந்த ஆண்டிலிருந்து முதலாமாண்டு சேர்க்கை ஆரம்பித்தார்கள், ரியாலுல் ஜினானின் முதல் மூன்று வருடங்களும் ஆவூராருக்காகவே உருவாகி இன்றும் அது தொடர்கிறது.

தாஜுஷ் ஷரீஅத் அல்லாமா ஷம்சுல் ஹுதா ஹழரத் ரஹ் அங்கு அப்போது இருந்தார்கள். அவர்கள் செய்யிதுனா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரர் ஹழரத் ஹுசைன் ரலி அவர்களின் மரபில் வந்தவர்கள். இது பலபேருக்கும் தெரியாது. எனது சனதில் மட்டுமே செய்யிது ஷம்சுல் ஹுதா என்று கையொப்பமிட்டார்கள்.

ஆவூராரை அழைத்து உன் பெயரென்ன என்று கேட்டார்கள். அவர் அக்பர் பாதுஷா என்றார் (இதுதான் இயற்பெயர்).இது சரியில்லாத ஒரு மன்னனின் பெயர் எனவே இன்றிலிருந்து நீ அப்துஷ் ஷகூர் என்றார்கள்

அல்லாஹுதஆலா திருக்குர்ஆனில் ஹழரத் நூஹ் அலை அவர்களைப் பற்றி

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا

(17:3. நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.)

நூஹ்  ( அலை ) நன்றி செலுத்தும் அடியாராக அப்துஷ்ஷகூராக இருந்தார் என்று கூறுகிறான். இதே வார்த்தையைத்தான் நபி ஸல்.... அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் முன்பின்பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிஅவர்களின் இபாதத் பற்றிக் கேட்டபோது” நான் நன்றியுள்ள அடியானாக (அப்துஷ் ஷகூராக) இருக்கவேண்டாமா” என்று கேட்டார்கள்.

அதையே பெயராக ஷம்சுல் ஹுதா ஹழ்ரத் அக்பர் பாதுஷாவிற்கு வைக்க அதுவே நிலைத்துவிட்டது. நபி ( ஸல் ) அவர்கள் பலரின் பெயர்களை அவர்களின் முதுமையிலும் மாற்றி உள்ளார்கள். அப்படி மாற்றியதை ஏற்காத பலரும் பல கஷ்டங்களுக்கு ஆளானார்கள்

இங்கு நபிஸல் அவர்களின் குடும்ப வாரிசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அது துலங்கியதற்கும் ஆதாரமாக அப்துஷ்ஷகூர் ஹழரத் இருக்கிறார்கள்

................................................................................இது போன்ற நினைவலைகளில் ஆவூர் ஹழரத்தின் நினைவரங்கம் நெகிழ்ந்திருந்த்து

அண்ணாரின் மறுமை வாழ்வை அல்லாஹ் மனம் நிறைவானதாக்கி வைப்பானாக! ஆமீன்!

நன்றி ;- ஜுனைதுல் பக்தாதி ஹஜ்ரத்.