Showing posts with label எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத். Show all posts
Showing posts with label எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத். Show all posts

Saturday, May 27, 2017

ரமலான் தரும் ஈமானின் சிந்தனைகள் !!!


















நேன்பில் புடம் போடப்படும் ஈமான்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,


அன்பும் அருளும் நிறைந்த நேசமிகு நேயர்களே......!

உங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமலான் மாதத்தில் பூமான் நபி (ஸல்) அவர்களின் பாக்கியமிகு உம்மத்தாகிய உங்களை சந்திப்பதில், 

உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

 நோன்பு ஓரு அதிசயம்

பணக்காரன் பட்டினி கிடக்கும் அதிசயம்....!

சதாவும் தின்பண்டம் கேட்டு நச்சரிக்கும் சிறுவன் கூட நோன்பு நோற்று கொடுத்தாலும் திண்ணாமல் அடம்பிடிப்பது ஓர் அதிசயம்….!

ரமலான் என்றாலே சுட்டெரிப்பது. நோன்பாளியின் பாவம் இதில் சுட்டெரிக்கப்படுகிறது.

உடலின் செயல்பாடான இஸ்லாத்தையும் உள்ளத்தின் வெளிப்பாடான ஈமானையும்,நோன்பு ; பசியென்னும் நெருப்பிலே புடம் போட்டு ஜொலிக்கச்செய்கிறது.

“இறைநம்பிக்கையாளர்களே......!  உங்களுக்கு முன்பிருந்தவர்களின்மீது கடமையாக்கப்பட்டது போல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பரிசுத்தவான்களாவீர்கள்.” {அல்குர்ஆன். 2:183} 1

நோன்பு உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்துகிறது. பௌதீக, ஆன்மீக வியாதிகளை அது குணப்படுத்தி, சுத்தப்படுத்துவதால் நோன்பு உடலையும், உள்ளத்தையும் புடம் போட்ட தங்கமாக மிளிரச் செய்கிறது.




















“ஒருநாள் நோன்பு பிடிப்பது மூன்றுவாரம் மருந்தெடுப்பதற்கு சமம்.” என்று சொல்லுவார் மருத்துவத்தின் தந்தை இப்னு சீனா அவர்கள்.

பெரிய பாதிப்பை உண்டாக்கும் வியாதிகள் இரண்டு.

1.கொழுப்புச்சத்து அதிகரிப்பது.

2.நீரழிவு நோய்.

இந்த இரண்டு நோயும் நோன்பில் கரைகிறது அல்ல குறைகிறது. கொசுவை ஒழிப்பதை விட அது உற்பத்தியாகக் காரணமாக இருக்கிற சாக்கடையை ஒழிப்பது தான் இஸ்லாமிய அனுகுமுறை. இந்த வகையில் தான் விபச்சாரம் செய்யாதீர் என்று சொல்லாமல் “விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்க வேண்டாம்" 2 என்று எச்சரிப்பான் அல்லாஹ்.  அந்தமாதிரி நோயை ஒழிக்க முயற்சிப்பதை விட நோயை உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து அதைக்களைய முயற்சிப்பது புத்திசாலித்தனம். பொதுவாக உணவுமுறையில் கட்டுப்பாடு இல்லாததே பெரும்பாலான வியாதிகளுக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. நோன்பு உணவுக்கட்டுப்பாட்டை வரையறை செய்கிறது.

வாழ்வியலின் எல்லா விதிகளும் குர்ஆனில் இருக்கிறது என்றால் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாகத் திகழும் மருத்துவ மூல விதி எதுவும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா....  என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவிடம் ஒருமத அறிஞர் கேட்டார். அப்போது அந்த அவையில் வீற்றிருந்த அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ அவர்கள் எழுந்து உடல் நலத்திற்கான {Golden Rule} தங்க விதியொன்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது  என்றார். "அது என்ன....?"

“உண்ணுங்கள் பருகுங்கள் அளவு கடந்து விடாதீர்கள்.” {அத்தியாயம்.7வசனம்.31}   3

இந்த வசனத்தைக் கேட்டதும் அசந்து போன அந்த அறிஞர் நானும் ஒரு மருத்துவர்தான் இது ஒரு அற்புதமான விதி என்பதை ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறே உங்கள் நபிமொழியில் ஆன்மீக போதனைகள் நிறைந்திருக்கின்ற மாதிரி உடல்நலம் தொடர்பான ஏதாவது மூலவிதிகள் கூறப்பட்டிருகிறதா...? என மீண்டும் கேள்வி எழுப்பினார்.   அதற்கு ஆம்..!  என பதிலளித்த அந்த அரசரவை அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அவர்கள் ; ஒரு நபிமொழியை அவருக்கு படித்துக்காண்பித்தார்.  “இரைப்பைதான்  எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.” 4 இதைக்கேட்டு அதிசயித்துப்போன அந்த மருத்துவ அறிஞர் உங்களுடைய வேதமும் உங்களுடைய நபியும் மருத்துவமேதை  ஜாலினூஸுக்கு எதையும் விட்டுவைக்கவில்லை எனக் கூறி வியந்தார்.


உணவு அதிகமாக உட்கொள்வதே எல்லா வியாதிகளுக்கும் மூலக்காரணம் என்பதை இப்போது எல்லா மருத்துவமும் உறுதி செய்கிறது. எந்த ஒரு இயந்திரமும், கூடுதல் சுமை அதில் ஏற்றப்படும்போது அது பழுதாகி செயலிழந்து விடும் என்பது தெரிந்ததே. இரைப்பையும் அவ்வாறு தான். குறைந்த அளவு உணவை அது உள்வாங்கினால் அதை ஜீரணமாக்கி நல்ல பலனைத்தரும். அதிக உணவை அதில் அடைத்தால் ஆபத்துதான் ஏற்படும். நாயகம் ஸல் அவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பசியாற சாப்பிட்டதில்லை. ஒரு நாள் சாப்பிட்டால் மறுநாள் பட்டினியாக இருப்பார்கள். இரண்டு தினங்கள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் பட்டினியோடு இருப்பார்கள். சாப்பிட்டாலும் கொஞ்சமாக சாப்பிடுவார்கள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவார்கள். வேகமாக சாப்பிடமாட்டார்கள். இதுவெல்லாம் இப்போது மருத்துவ உலகம் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் பரிந்துரைகளாகும்.


ஒரு அரசர் தனது நாட்டிலுள்ள சிறந்த மருத்துவர் ஒருவரை மதீனாவுக்கு அங்குள்ள மக்களுக்கு சிகிச்சையளிக்க அனுப்பிவைத்தார். அப்போது திருமதீனாவில் வேறு எந்த மருத்துவரும் இல்லாததால் தனக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என பெரிதும் எதிர்பார்ப்புடன் அங்கு போய் சேர்ந்த அந்த மருத்துவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், அங்கு அவரிடம் சிகிச்சை பெற ஒரு நோயாளியும் வரவில்லை. எனவே அவர் நாயகம் ஸல் அவர்கள் சமூகம் வந்து இங்கு நான் வந்ததே எனது வேலை இங்கு அதிகம் நடக்கும் என நினைத்து. ஆனால் இங்கே யாருமே சிகிச்சைக்கு வரவில்லையே என முறையிட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் இங்குள்ள மக்கள் பசிக்கும்போது சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் பசி பாக்கி இருக்கும் போது உணவிலிருந்து  தங்களது கையை எடுத்துவிடுவார்கள். இதனால் இங்கு நோயாளிகள் ரொம்பக்குறைவு" என அவருக்கு எடுத்துரைத்தார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆரோக்கியத்திற்கான இந்த இரகசியம் கண்டு மருத்துவ விஞ்ஞான உலகம் இன்றும் அதிசயித்து நிற்கிறது. ஆகவே நோயைக் குறைக்க உணவைக் குறைக்க வேண்டும்.

பொதுவாக, தேவைக்கு அதிகமாகவே நாம் சாப்பிடுகிறோம். நல்ல உடல் வலிமைக்கும், நலத்திற்கும் அதிகமாக உண்ண வேண்டிய அவசியமில்லை என்பது மருத்துவ உண்மை. இதை விளங்கிக் கொள்ள இரண்டு உதாரணம்.

ஒன்று காட்டு ராஜாவான சிங்கம். இதன் உடல்வலிமை, அதன் தசைப்பிடிப்பு யாரும் அறியாததல்ல. ஏதாவது ஒரு மிருகத்திற்கு முன்பு அது தோன்றிவிட்டால் இதைப்பார்த்ததுமே அந்த மிருகத்திற்கு பாதி உயிர் போய் விடும். ஏதாவது ஒரு மிருகத்தின் மீது இது பாய்ந்தால் அப்போது அதன் வேகத்தையும் வீரியத்தையும் காண்போர் அதிசயித்துப் போவர். இவ்வளவு வலிமை வாய்ந்த சிங்கத்தின் உணவு எவ்வளவு என்பதை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். வாரத்தில் ஒருமுறை தான் இறைச்சி சாப்பிடுமாம். இது ஒரு இடத்திலுள்ள சிங்கத்தின் நிலையல்ல. உலகின் பல இடங்களில் வளர்க்கப்படும் சிங்கங்களின் உணவு அளவும் இவ்வாறுதான் இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. எல்லா சிங்கத்திற்கும் வாரத்திற்கு ஒரு முறை தான் உணவு.


இரண்டாவது உதாரணம். முதலை. {Crocodile} இது நல்ல ஆரோக்கியத்துடன் 200 வருடம் வரை கூட வாழும் பெரும் வயதை உடையது. அதன்  சக்தி எந்தளவுக்கு அதிகமென்றால், அது வாலை சுருட்டி பலம் வாய்ந்த சிங்கத்தை அடித்தால் கூட அதன் கால்கள் ஒடிந்து போகுமே தவிர, அதைவிட்டு தப்பமுடியாது. இப்போது அதன் நீண்ட வயதுக்கும் அதன் ஆற்றலுக்கும் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது குறைந்த அளவு உணவை அது உண்டு வாழ்வதே காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதைக் கேட்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். முதலையின் உடல் எடை 700 கிலோ. அதாவது 70 கிலோ எடையுள்ள 10 மனிதர்களின் எடைக்கு நிகரானவை. ஆனால் அது ஒரு நாளைக்கு வெறும் 700 கிராம் உணவைத்தான் உட்கொண்டு வாழ்கிறது. அதாவது ஒரு கிலோ கிராமைவிட குறைவு. இது சிந்திக்க வேண்டிய விஷயமாகும். நமது மதிய உணவே இரண்டு கிலோ கிராமைவிட கூடுதலாக இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு மூன்றுவேளை என்றில்லாமல் அதைவிடவும் அதிகமாக நினைக்கும் போதெல்லாம், கிடைக்கும் போதெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் நமது உணவு அளவு எவ்வளவு....?


உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் சீராக இரத்த சப்ளை செய்யும் மூளை, அதிகம் சாப்பிடும்போது இரைப்பைக்கு அதிகமாக இரத்தம் அனுப்ப உத்தரவிடுகிறது. இரைப்பை உள் வாங்கிய உணவை ஜிரணிக்க அதிக ரத்தம் அதற்கு தேவைப்படுகிறது. இப்படி  இரைப்பைக்கு அதிக ரத்தம் செல்வதால் மற்ற உறுப்புகளுக்கும் மூளைக்கும் குறைவான அளவே ரத்தம் போய்ச்சேருவதால் அவைகளுக்கு சோர்வு உண்டாகி, களைப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதனால் மூளைக்கு சிந்தனை திறனும் உறுப்புகளுக்கு செயல் திறனும் குறைந்துபோய் விடுகிறது. இதனால் எல்லா வகையிலும் பலவீனம், உடல் தளர்வு ஏற்படுகிறது.


உலகில் நல்ல செயல் திறனும் சிந்தனை திறனும் பெற்ற புகழ்பெற்ற மேதைகளின் உணவு அளவு எவ்வளவு என்று பார்த்தால் ரொம்ப ரொம்ப அவசியமான சொற்பமானதாகவே இருந்திருக்கிறது. இலட்சக்கணக்கான நபி மொழிகளை மனப்பாடம் செய்துள்ள மிகச் சிறந்த நபிமொழி ஆய்வாளர் ஹழரத் இமாம் புகாரி அவர்களிடம் நீங்கள் ஒரு தினத்தில் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் எனக்கேட்டதற்கு இப்போதெல்லாம் நான் ஒருநாளைக்கு ஏழு பாதாம் சாப்பிட்டுவிட்டு வேலையில் ஈடுபட்டுவிடுவேன். எனது முழு நாளும் இதிலே கழிந்துவிடுகிறது" என பதிலளித்தார்கள்.


இன்னொரு உதாரணம். மாமேதை ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் 1879-1955 விஞ்ஞான உலகின் தீர்க்கதரிசியாக கொண்டாடப்படுபவர். அறிவியல் வரலாற்றில் தனது சார்பு நிலை கோட்பாட்டின் மூலம் மிகப் பெரிய விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டவர். இவருடைய பதப்படுத்தப்பட்ட உடல் இன்னும் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. அதைப்பார்ப்பவர்களுக்கு தெரியும். அந்த உடலின் எடை 70 கிலோ விட கூடுதலாக இருக்க வாய்ப்பில்லை என்று. ஆனால் அவருக்கு அல்லாஹ் எந்தளவுக்கு மூளை கொடுத்துள்ளான் என்பது உலகிற்கே தெரியும்.


யாருடைய மூளை, முழு சிந்தனைத் திறனைப்பெற்று விளங்குகிறதோ அவர்களெல்லாம் யாரென்றால், யாருடைய உடலில் கொழுப்பு சத்து குறைந்து நல்ல உடல்நலத்தோடு வாழ்கிறார்களோ அவர்களேயாகும். ஆக நமக்கு தேவையும் அவசியமும் என்னவென்றால், நல்ல உணவுப்பழக்கம். புனித ரமலான் மாதம் நமக்கு அத்தகைய நல்ல உணவு பழக்கத்தையும், நல்ல உணவு கட்டுப்பாட்டையும் கற்றுத்தருகிறது. இப்படி மனிதன் தானாக தனக்கு நல்ல உணவுக்கட்டுப்பாட்டை உருவாக்கி, உணவையும், சாப்பிடும் நேரத்தையும் குறைத்துக் கொள்வானோ மாட்டானோ..?  அதனால் அல்லாஹ் அவனுக்கு ஒரு மாதம் ரமலானில் கட்டாய கட்டுப்பாட்டை, நோன்பை கடமையாக்கியதன் மூலம் கொண்டு வந்து விட்டான். அதன் மூலம் அவன் உடல் நலம் பெற்று வாழ வழி வகுத்தான். இந்த வகையில் ரமலான் மாதம் இந்த உலகிற்கு ஆரோக்கியத்திற்கான சிறப்பு தூதனாகும். உடல் சுத்தம் என்பது ஆரோக்கியம் என்றால் உளத்தூய்மை என்பது இறையச்சமாகும்.


நோன்பு கடமை என்பதைப்பற்றி பேசும் 2-183 வது வசனம் ஈமானைக் கொண்டு தொடங்கப்பட்டு இறையச்சத்தைக்கொண்டு முடிக்கப்பட்டுள்ளது.


நேர்மையான ஒழுக்கமுள்ள வாழ்கைக்கு ஆரம்பம் நம்பிக்கை என்றால் அதன் முடிவு இறையச்சமாகும். இறைநம்பிக்கையாளர்களுக்கு இறையச்சம் ஏற்பட நோன்பு துணை செய்கிறது. ஈமான் {நம்பிக்கை} என்றால் என்ன....?

ஈமான் என்பது அல்லாஹ்வின் உள்ளமையை {ஏகத்துவத்தை} நம்புவது மட்டுமல்ல.

"நாம் எங்கிருந்தாலும் அவன் நம்முடன் இருக்கிறான்".{அத்தியாயம்;57.வசனம்;4}.  5


"நாம் தனியாக நின்றாலும் சேர்ந்து செயல்பட்டாலும் அவன் நம்மைப்பார்க்கிறான்".  {அத்தியாயம்;26. வசனம்;218,219,220}   6


"நிச்சயமாக அல்லாஹ்வுக்கு பூமியிலும் வானத்திலும் எந்த ஒன்றும் மறைவானதல்ல".  {அத்தியாயம்;3 வசனம்;5}  7


"நிச்சயமாக அல்லாஹ் நம்மை கவனித்தவனாகவே இருக்கிறான்"

{அத்தியாயம்;4. வசனம்;1}   8


"நமது கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவைகளையும் அவன் நன்கறிவான்". {அத்தியாயம்;40. வசனம்;19}  9

என்றெல்லாம் நாம் அல்லாஹ்வை நம்பவேண்டும். இந்த இறைநம்பிக்கை. நோன்பு என்னும் அக்கினியில் புடம் போடப்பட்ட தங்கமாக ஜொலிப்பதை பார்க்கலாம். சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நோன்பு நோற்று கடுந்தாகம் ஏற்பட்டாலும், உண்ணா நோன்பின் இடையில் கோரப்பசி கோரத்தாண்டவம் ஆடினாலும் நோன்பாளி யாருக்கும் தெரியாமல் பூட்டப்பட்ட அறையில் வைத்தோ அல்லது அறிமுகமானவர் யாருமில்லாத ஒரு இடத்திற்குச் சென்றோ குடிக்கவோ சாப்பிடவோ மாட்டார். ஏனென்றால் நம்மைப் போன்ற மனிதர்கள் பார்க்காவிட்டாலும் நம்மைப் படைத்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அசைக்கமுடியாத அவனது நம்பிக்கை தான் காரணம். நோன்பு தரும் இந்த ஈமான் நம்பிக்கை வாழ்வின் எல்லா கட்டத்திலும் தொடர்ந்தால் அவனே பரிசுத்தமாகி புனிதமாக மாறிவிடுவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அல்லவா..  ஆனால் நோன்பு காலத்தில் வரும் இந்த நம்பிக்கை சார்ந்த சிந்தனையான இறையச்சம் மற்ற காலத்தில் பாவங்கள் செய்யும் போது வருவதில்லையே ஏன்...  அது நாம் பிடிக்கும் நோன்பு. வெறும் சடங்காக இருப்பதும். அர்த்தமுள்ளதாக இல்லாததும் தான் காரணம்.


இந்த வகையில் நோன்பை அறிஞர்கள் மூன்றாக வகைப்படுத்துவார்கள்.10


ஒன்றாவது சராசரியான (அவாம்களின்) நோன்பு. صوم العوام

உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருப்பதாகும். இது தான் பெரும்பாலானோர் பிடிக்கும் நோன்பாக உள்ளது. இப்படி நோன்பு நோற்பதால் கடமை முடிந்து விடலாம். கூலியும் இறைவனிடம் கிடைக்கலாம் ஆனால் நோன்பினால் கிடைக்கவேண்டிய பலா பலன் ஒன்றும் கிடைக்காது.


இரண்டாவது. பக்தியாளர்களின் நோன்பு. صوم الخواص

உடலின் ஏழு உறுப்புக்களான கண், காது, நாக்கு, வயிறு, வெட்கஸ்தலம், கை, கால் ஆகிய அங்க அவயங்களை அல்லாஹ்விற்கு மாறு செய்யாமல் தடுத்து தற்காத்துக் கொள்வதாகும்.

நோன்பு இறையச்சத்தை தரும் என்று திருக்குர்ஆன் சொல்வது இந்த வகை நோன்பைத்தான் என்று விளங்கவேண்டும்.

இதை சற்று விரிவாக பார்க்கலாம்...


நாவின் நோன்பு. صوم اللسان

நாவைப் பேணுவதாகும். கெட்டவார்த்தை, பொய், பித்தலாட்டம், அவதூறு, வீணான தர்க்கம் போன்ற சொற்பாவங்களை, குறிப்பாக புறம் பேசுவது, கோள் சொல்வதை விட்டும் நாவை நோன்பாளி பாதுகாக்க வேண்டும். குர்ஆன் ஓதுவதில் திக்ரு செய்வதில் ஈடுபட வேண்டும் அல்லது பேசாமல் இருக்க வேண்டும்.

"யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ, அவர் தமது உணவையும் பானத்தையும் மட்டும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை". என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் 11              {புகாரி எண்;1903}.


நபி ஸல் அவர்களின் காலத்தில் இரு பெண்கள் நோன்பு நோற்று கடும் நாவறட்சி உண்டாகி உயிருக்கு ஆபத்தான நிலையிலிருப்பதாக நபியிடம் சொல்லப்பட்டது. அப்போது அவ்விருவரையும் வாந்தியெடுத்து விட சொன்னபோது, இரத்தமும் சளியும் பச்சைக்கறியுமாக வாந்தியெடுத்தார்கள்.

இந்த இருவரும் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை உண்ணாமல் நோன்பிருந்தார்கள். அல்லாஹ் ஹராமாக்கியதை செய்து நோன்பை முறித்து விட்டார்கள். இவ்விருவரும் அமர்ந்து ஒருவருக்கொருவர் புறம் பேசி மக்களின் இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அது தான் வாந்தியில் வந்தது.12


"உங்களில் ஒருவர் மற்ற எவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவானா...? அதனை நீங்கள் வெறுப்பீர்கள் புறம் பேசுவதும் அவ்வாறே".13 {அத்தியாயம்;49. வசனம்;12}.

கண்ணிண் நோன்பு صوم العين

காணக்கூடாத காட்சிகளைப் பார்க்காமல் கண்களை பாதுகாக்கனும்.

"பார்வை இப்லீஸின் அம்புகளில் ஒரு அம்பு. இன்னொரு அறிவிப்பில் விஷம் தோய்ந்த ஒரு அம்பு என வந்துள்ளது. யார் அல்லாஹ்வை பயந்து அதைத்தவிர்த்து விடுவாரோ அவருடைய இதயத்தில் அல்லாஹ் ஈமானின் சுவையை வழங்கிடுவான்."14

இது மட்டுமல்ல இறை நினைவை மறக்கச் செய்பவைகளை விட்டும் பார்வையைத் தடுத்து திருப்பிக்கொள்ளனும்.


சுலைமான் நபியும் அவர்களுடைய ராணுவமும் எறும்புகள் வசிக்கும் ஒரு ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு கூறியது. எறும்புகளே.... "நீங்கள் உங்கள் பொந்துகளில் நுழைந்து கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய ராணுவமும் அறியாது உங்களை மிதித்து தகர்த்து விட வேண்டாம்.  இதன் சொல்லைக்கேட்டு அவர் (சுலைமான் நபி அலை) அவர்கள் புன்னகை புரிந்தார்கள்".  15    {அத்தியாயம்;27. வசனம்;18,19}


தனது எறும்புக்கூட்டத்திற்கு உத்தரவிட்ட அந்த தலைமை எறும்பைபார்த்து , நான் நீதி மிக்க ஓரு நபி என்று உனக்கு தெரியாதா... நான் உங்களுக்கு அநியாயம் செய்வேன் என்று பயப்படலாமா..?  என சுலைமான் அலை அவர்கள் கேட்டபோது

"அவர்களுக்கு தெரியாமல்" என்று நான் சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லையா.... தெரிந்து இந்த அநியாயம் செய்து விடமாட்டார்கள் தெரியாமலே நம்மை கவனிக்காமலே இந்த தவறு நிகழ்ந்துவிடலாம் என்றுதான் எச்சரித்தேன். மேலும் நான் உடல் தகர்ப்பை உத்தேசிக்கவில்லை. உள்ளத் தகர்ப்பை தான் நாடினேன். மகாராஜாவான உங்களையும் உங்களது ஆரவாரமான பெரும்படையையும் பார்த்து அவைகளுக்கு உலக ஆசை வந்து விடக்கூடாதே மேலும் அவைகள் செய்து வந்த திக்ரும் தஸ்பீஹும் தடைபட்டு விடக்கூடாதே என்று பயந்து தான் அவைகளை எச்சரித்தேன் என்று எறும்பு விளக்கமளித்ததாம்.                      {ஆதாரம்; தப்ஸிர் குர்துபி} 16

செவியின் நோன்பு. صوم الاذن

ஹராமான மக்ரூஹான சொல்லைக் கேட்பதை விட்டும் காதைப் பாதுகாக்கனும்.


"உலகில் இழிவும் மறுமையில் பயங்கரமான வேதனையும் உள்ள அவர்கள் பொய்யையே அதிகமாக கேட்பவர்கள்".17    {அத்தியாயம்;5 வசனம்;41,42}

"புறம் பேசுபவன் அதைக்கேட்பவன் இருவருமே பாவத்தில் கூட்டாளிகளே".

                                                                                (நபிமொழி.)

வயிற்றின் நோன்பு. صوم البطن

ஹராமான உணவை விட்டும் வயிற்றைப் பாதுகாக்கனும்.

"நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையான ஹலாலான உணவைத்தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் அவனது தூதர்களுக்கு கட்டளையிட்டதையே அவன் விசுவாசிகளுக்கும் கட்டளையிட்டுள்ளான்.  என்னுடைய தூதர்களே....  நீங்கள் பரிசுத்தமான ஹலாலானதையே உண்ணுங்கள். நற்காரியங்களைச் செய்யுங்கள்".   {அத்தியாயம்;21 வசனம்;51} "எனது நம்பிக்கையாளர்களே.....  நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தூய்மையான ஹலாலானதையே புசியுங்கள்".                                  {அத்தியாயம்;2 வசனம்;172} 

ஒருவன் நீண்டப் பயணம் மேற்கொள்கிறான் அவனது தலை புழுதி படர்ந்திருக்கிறது. தலைவிரி கோலமாகவும் இருக்கிறான். அவன் தனது இரண்டு கரங்களையும் வானத்தின் பக்கம் உயர்த்தி யாரப்பி.....யாரப்பி... எனது இரட்சகா....எனது இரட்சகா.... என பிராத்திக்கிறான். ஆனால் அவனது உணவு ஹராம். அவனது உடை ஹராம். அவனது குடிப்பு ஹராம். ஹராம் கொண்டு உணவளிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்..  .(முஸ்லிம்.)18

"உனது உணவை தூய்மையாக்கு (ஹலாலாக்கு). துஆ ஒப்புக்கொள்ளப்பட்டவனாக நீ ஆகுவாய்".  (நபிமொழி.)


கற்பின் நோன்பு.صوم الفرج

தகாத உறவு மற்றும் காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய காரியங்களை விட்டும் தனது கற்பைப் பாதுகாக்கனும்.


"நபியே.......நம்பிக்கையாளர்களுக்கு கூறுங்கள். அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்களது கற்பையும் பாதுகாக்க வேண்டும். அது அவர்களுக்கு பரிசுத்தமானதாகும்".19          {அத்தியாயம்;24. வசனம்;30}


"ஆதமுடைய மகன் மீது தகாத உறவில் அவனது பங்களிப்பு எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடைந்தே தீருவான். அவனது இரண்டு கண்கள் செய்யும் விபச்சாரம் பார்ப்பதாகும். அவனது இரு காதுகள் செய்யும் விபச்சாரம் கேட்பதாகும். அவனது கால்களின் விபச்சாரம் நடப்பதாகும். மனம் ஆசைப்படும் மறை உறுப்பு அதை நிறைவேற்றி மெய்யாக்கும் அல்லது பொய்யாக்கும்".20


கையின் நோன்பு.صوم اليد

பாவப்பட்ட பலகீனமானவர்களை அநியாயமாக அடிப்பதைப் போன்ற கொடுமையிலிருந்து கையை பாதுகாக்கனும்.


காலின் நோன்பு صوم الرجل

பாவமான காரியங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லாமலிருப்பது. மேலும் காலால் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் இருப்பது.


இப்படி ஏழு உறுப்புகளும் நோன்பு நோற்றால் அது அவனை பரிசுத்தமாக்கி எல்லா நிலையிலும் இறையச்சமுள்ளவனாக அவனை அந்த நோன்பு மாற்றும்.


மூன்றாவது வகை நோன்பு:இறைஞானியின் நோன்பு 

صوم خواص الخواص

அல்லாஹ் அல்லாதவைகளை விட்டும் உள்ளத்தை பாதுகாப்பதாகும். எல்லா நேரத்திலும் இறைதியானத்தில் இறை வழிபாட்டில் இறை விழிப்புணர்வில் திளைத்திருப்பது. கொஞ்ச நேரம் இந்நிலை மாறினால் {அல்லாஹ்வை மறந்தால்} இவர்களின் நோன்பு முறிந்து விடும்.


ஆதிபிதா ஆதம் அலை அவர்கள் இவ்வுலகிற்க்கு வந்ததும் தான் வசிக்க வீடு கட்டவில்லை. தன் இறைவனை வணங்க ஆதி இல்லமாம் கஃபாவைத்தான் கட்டினார்கள். ஏனென்றால் அவர்கள் இங்கு இந்த உலகிற்கு வந்தது வாழ்வதற்கு அல்ல. வணங்குவதற்கு. அப்படியென்றால் வாழவே கூடாதா...?  என்றால் அப்படி இல்லை. வாழலாம். வாழ்க்கையை வணக்கமாக மாற்றி வாழனும். வாழ்க்கையை மாற்றுவது எப்படி...? அது தான் இஹ்ஸானுடைய வாழ்க்கை. வாழ்க்கையை வணக்கமாக வாழ்வது, வாழ்வை அழகாக்குவதாகும். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும்  இறைவிழிப்போடு கண்டு கழிப்பதாகும். வாழ்வை அணு அணுவாக அனுபவித்து உயிர் வாழ்வது வாழ்தலுக்கு எழில் சேர்ப்பதாகும். இதை "முஷாஹதா" என கூறுவார்கள். இந்த விழிப்பு நிலையான தரிசன வாழ்வு, உனக்கு மலரவில்லையெனில், அந்த பேரிறை அல்லாஹ் உன்னைக் காண்கிறான் என்ற விழிப்புணர்வுடன் கண்காணிப்பு வாழ்க்கை வாழனும். இதை "முராக்கபா". {தியான வாழ்க்கை} என்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கணமும் இறைவன் தன்னைப்பார்க்கிறான் என்ற பக்தியுணர்வுடன் கழியும் போது வாழ்க்கை வசந்தமாகும். உயிர் வாழ்தல் உன்னதமாகி உயர்வும் தூய்மையும் அடைந்து விடும். இந்த நிலையில் நோன்பு, இஹ்ஸானுடைய வாழ்க்கையின் முதல் நிலையான தியான வாழ்க்கைக்கு பயிற்சியளித்து இரண்டாவது நிலையான இறைவிழிப்பு தரிசன நிலைக்கு நோன்பாளியை உயர்த்துகிறது.


இந்த விழிப்பு நிலைக்கு வழி சொல்லும் ஒரு தகவல்.  முடி துறந்த இறைஞானி இப்ராஹிம் இப்னு அத்ஹம் அவர்களிடம் ஒரு இளைஞன் வந்து, நான் வரம்பு மீறி நடந்து விட்டேன். நான் திருந்திவாழ வழி சொல்லுங்கள் எனக்கேட்டு நின்றார். அதற்கு ஞானி மஹான் அருளிய உபதேசம். நீ ஐந்து காரியம் செய்ய சக்தி பெற்றிருந்தால் நீ தாராளமாக தவறு செய்யலாம்.


முதலாவது. நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனது ரிஸ்கில்- {உணவில்} எதையும் சாப்பிடாதே... இதைக்கேட்டு அவ்வாலிபன் அது எப்படி முடியும்...? எது சாப்பிட்டாலும் அது அவனுடையதுதானே..  அப்படியானால் அவனுடைய உணவை உண்டு விட்டு அவனுக்கே மாறு செய்வது உனக்கு நியாயமா....?  உண்ட வீட்டுக்கு இரண்டகமல்லவா.?   "ஆம் நியாயமில்லை தான். இரண்டாவதை கூறுங்கள்." 

"நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய எந்த நாட்டிலும் தங்காதே... அவனுடைய நாட்டை விட்டும் வெளியேறி விடு" முன்பை விட அதிகம் ஆச்சரியமடைந்த அவ்வாலிபன்  எல்லாம் அவனுடைய நாடாக இருக்க இது எப்படி சாத்தியமாகும்...". 

"என்னப்பா, அப்படியென்றால் அவனுடைய நாட்டில் இருந்து கொண்டே அவனுக்கு மாறு செய்யலாமா...  

"ஆம் செய்யக்கூடாது தான். மூன்றாவது உபதேசம் சொல்லுங்கள்."

"நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய எண்ணினால் அவனுக்கு தெரியாமல் அவன் பார்க்காத இடமாகப்பார்த்து அங்கு போய் பாவம் செய்."

"இது எப்படி முடியும். அவன் பார்க்காத இடமே இவ்வுலகில் இல்லையே. அவன் அந்தரங்கங்களை  அறிந்தவனாயிற்றே.

"நிச்சயமாக அவன் ரகசியத்தையும் அதை விட ரகசியமாக மனதில் இருப்பதையும் அறிகிறான்". 21    (அத்தியாயம்;20.வசனம்;7)

 கும்மிருட்டில் கறுப்பு பாறையில் ஒரு கறுப்பு எறும்பு ஊர்ந்து போவதையும்  அவன் பார்ப்பவனாயிற்றே.

அப்படியானால் அவன் பார்க்கிறான் என்று தெரியவே நீ அவனுக்கு மாறு செய்யலாமா.. நீ தனியறையில் யாருக்கும்  தெரியாமல் தவறாக நடக்க முற்படும் போது அந்த அறையில் உள்ள ஓரு துவாரத்தின் வழியாக யாரோ ஓரு ஆள் உன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தால், உன்னால் அங்கு தவறு செய்ய முடியுமா...  முடியவே முடியாது.


அப்படியானால் உன்னைப்போல ஒரு மனிதன் பார்க்கவே, தவறு செய்ய வெட்கப்படுபவன். உன்னைப்படைத்த இரட்சகனாம் அல்லாஹ் பார்க்கிறான் எனத்தெரிந்தும் வெட்டகமில்லாமல் அவனுக்கு முன்னால் பாவம் செய்யலாமா...  கூடவே கூடாது. 

நான்காவதைக கூறுங்கள்.  உனது உயிரைக் கைப்பற்ற மலக்குல் மவ்த் உன்னிடம் வந்தால் அவரிடம் கொஞ்சம் டைம் கேள். தௌபா செய்வதற்கு. அது நடக்கவே நடக்காதே.

"அவர்களுடைய காலம் வரும்பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்". {அத்தியாயம்;7.வசனம்;34} என்று அல்லாஹ் கூறுகிறான்.22


மரணத்தை தள்ளிவைக்க முடியாது என்று தெரியும் போது நீ பாவத்தில் மூழ்கியிருக்கும் போது உனது மரண நேரம் வந்துவிட்டால் உனது கதி என்னவாகும்....


"விபச்சாரம் செய்பவன் அவன் விபச்சாரம் செய்யும் போது மூஃமினாக இருக்கமாட்டான். குடிகாரன் அவன் குடிக்கும் போது மூஃமினாக இருக்க மாட்டான்". என நபி ஸல் அவர்கள் நவின்றுள்ளார்கள்.23

   {புகாரி.2475. முஸ்லிம்57. அபூதாவூத்.4689. திர்மிதி.2625}.


ஈமானின் பிரகாசம் உன்னை விட்டும் விலகி இருக்கும் போது உனக்கு மரணம் வந்தால் உன் நிலை என்னவாகும்.?" 

"ஆகா ரொம்ப ஆபத்தாகும். ஐந்தாவது காரியத்தையும் கூறிவிடுங்கள்."


"நரகத்தின் காவலர்களான "சபானியா" மலக்குகள் உன்னை நரகத்திற்கு இழுத்துச்செல்ல உன்னிடம் வந்தால் நீ அவர்களுடன் போகாதே."

"இதுவெல்லாம் நடக்க கூடியதா.... ஒருக்காலும் நடக்க முடியாத காரியம்" எனக்கூறி அழ ஆரம்பித்து விட்டார். "போதும்....போதும் மஹான் அவர்களே.  நான் இஸ்திஃபார் {பாவ மன்னிப்பு} கேட்டு அவனிடமே {தௌபா} மீட்சி பெறுகிறேன்" எனக்கூறி விடைபெற்ற அவ்வாலிபர் அதற்கு பிறகு திருந்தி வாழ்ந்து இறைவணக்கத்திலே முழுமையாக ஈடுபட ஆரம்பித்தார்.


இந்த ஐந்து தியானப் பயிற்சிகளையும் ஒரு மனிதனுக்கு நோன்பு வழங்குகிறது. அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் நம்மைப்பார்த்துக் கொண்டிருக்கிறான். நாம் சாப்பிடுவது அவனது உணவு தான். நாம் வசிப்பது அவனது பிரதேசம்தான். நாம் அவனை விட்டும் அவனது பிடியை விட்டும் எங்கும் எப்பவும் தப்பவே முடியாது. அவனுக்கு தெரியாமல் எதுவும் நிகழாது என்ற தியானம்தான். நோன்பாளியை தனியாக இருந்தாலும் உண்ணாமல், பருகாமல், நோன்பை முறிக்கும் காரியம் செய்யாமல் தடுக்கிறது. நோன்பு தரும் இந்த தியானம் மற்ற காலத்திலும் தொடர்ந்தால் எப்போதும் நேர்மையாக ஒழுக்கமாக இருக்கப் பழகிடுவான். அது அவனை இறை விழிப்பு-{தரிசன நிலைக்கு} உயர்த்தி 'நோன்பு எனக்குரியது. நானே அவனுக்கு கூலி' என்ற இறை வாக்கு {ஹதிஸே குத்ஸி}24 அவனுக்கு சித்தியாகி விடும். இம்மேலான நோன்பை கடைபிடிக்கும் மாண்பாரெல்லாம் மேலான இறைமாண்பை அடைந்து எல்லையில்லா பேரானந்த பெருவெளியைப்பெற்று பிறவிப்பயனடைவர். சாஸ்வதமான பெருவாழ்வு வாழும் பெரும் பாக்கியம் பெறுவர்.


தேசிய உணவுக் களஞ்சியங்களின் நிர்வாகி அமைச்சராக இருக்கும் நீங்கள் அதிகமாக நோன்பு நோற்பதேன் என நபி யூசுப் அலை அவர்களிடம் வினவப்பட்டபோது. வயிறு நிரம்பி பசித்தவர்களை நான் மறந்திடுவேனே என பயப்படுகிறேன் என்று பதிலளித்தார்கள்.25


"கியாமத் நாளில் அடியானிடம் அல்லாஹ் ஆதமின் மகனே... உன்னிடம் உணவு கேட்டேன் நி எனக்கு உணவளிக்கவில்லையே என்று கேட்பான். நீ அகிலங்களின் அதிபதி உனக்கு எவ்வாறு உணவளிப்பது என அடியான் திருப்பிக்கேட்பான். எனது இன்ன அடியான் பசியுடன் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை நீ அவனுக்கு உணவளித்திருந்தால். அவனிடம் என்னைக் கண்டிருப்பாய். அவ்வாறே தாகித்து உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்தவனுக்கு நீர் புகட்டியிருந்தால். அவனிடம் என்னைக் கண்டிருப்பாய். அவ்வாறே நோயுற்ற எனது அடியானைக்காண நீ சென்றிருந்தால். அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்".

  {முஸ்லிம்.)26


பசித்திருக்கும் நோன்பாளியிடம் இறையருளை எப்போதும் காணலாம். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது நல்ல அடியார்களாக ஏற்று அருள் புரிவானாக. ஆமீன்.

----------------------------------------


1-يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ   2:183

2-وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا (17:32

3-وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ7:31 

4-المعدة بيت الداء ، والحمية رأس كل دواء

5-وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ57:04

6-الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ (26:218) وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ (219) إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (220)

7-إِنَّ اللَّهَ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ3:05

8-إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا 4:01

9-يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ 40:19

10-واعلم أن الصيام على ثلاث درجات: صوم العوام، وصوم الخواص، وصوم خواص الخواص. أما صوم العوام: فهو الإمساك عن شهوتي البطن والفرج، وما يقوم مقامهما من الفجر إلى الغروب، مع إرسال الجوارح في الزلات، وإهمال القلب في الغفلات. وصاحب هذا الصوم ليس له من صومه إلا الجوع، لقوله صلى الله عليه وسلم: " من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه " وأما صوم الخواص: فهو إمساك الجوارح كلها عن الفضول، وهو كل ما يشغل العبد عن الوصول، وحاصله: حفظ الجوارح الظاهرة والباطنة عن الاشتغال بما لا يعني. وأما صوم خواص الخواص: فهو حفظ القلب عن الالتفات لغير الرب، وحفظ السر عن الوقوف مع الغير، وحاصله: الإمساك عن شهود السوى، وعكوف القلب في حضرة المولى، وصاحب هذا صائم أبدا سرمدا. فأهل الحضرة على الدوام صائمون، وفي صلاتهم دائمون، نفعنا الله بهم وحشرنا معهم. آمين.) البحر المديد في تفسير القرآن المجيد)

11-من لم يدع قَول الزُّور وَالْعَمَل بِهِ فَلَيْسَ لله حَاجَة فِي أَن يدع طَعَامه وَشَرَابه " . أخرجه البُخَارِيّ .


12-وَعَن عُبَيدِ مَوْلَى رَسُولِ الله صَلَّى الله عَلَيه وسَلَّم ، أَنَّ امْرَأَتَيْنِ صَامَتَا عَلَى عَهْدِ رَسُولِ الله صَلَّى الله عَلَيه وسَلَّم ، فَجَلَسَتْ إِحْدَاهُمَا إِلَى الأُخْرَى ، فَجَعَلَتَا تَأْكُلاَنِ لُحُومَ النَّاسِ ، فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ الله صَلَّى الله عَلَيه وسَلَّم , فَقَالَ : يَا رَسُولَ الله إِنَّ هَاهُنَا امْرَأَتَيْنِ صَامَتَا وَقَدْ كَادَتَا أَنْ تَمُوتَا مِنَ الْعَطَشِ ، فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم ، أَوْ سَكَتَ ، ثُمَّ جَاءَهُ بَعْدَ ذَلِكَ ، أَحْسَبُهُ قَالَ فِي الظَّهِيرَةِ ، فَقَالَ : يَا رَسُولَ الله ، إِنَّهُمَا وَالله لَقَدْ مَاتَتَا ، أَوْ كَادَتَا أَنْ تَمُوتَا فَقَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم : ائْتُمُونِي بِهِمَا فَجَاءَتَا فَدَعَا بِعُسٍّ ، أَوْ قَدَحٍ فَقَالَ لإِحْدَيْهِمَا قِي ، فَقَاءَتْ مِنْ قَيْحٍ وَدَمٍ وَصَدِيدٍ حَتَّى قَاءَتْ نِصْفَ الْقَدَحِ وَقَالَ لِلأُخْرَى : قِي فَقَاءَتْ مِنْ قَيْحٍ وَدَمٍ وَصَدِيدٍ حَتَّى مَلأَتِ الْقَدَحَ ، ثُمَّ قَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم : إِنَّ هَاتَيْنِ صَامَتَا عَمَّا أَحَلَّ الله لَهُمَا ، وَأَفْطَرَتَا عَلَى مَا حَرَّمَ الله عَلَيْهِمَا ، جَلَسَتْ إِحْدَاهُمَا إِلَى الأُخْرَى فَجَعَلَتَا تَأْكُلاَنِ لُحُومَ النَّاسِ.

13-وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ

14-"النظرة سهم من سهام إبليس، من تركها من مخافتي؛ أبدلتهُ إيمانًا يجد حلاوته في قلبه". رواه الطبراني والحاكم عن ابن مسعود.


15-حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ () فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا


16-أن سليمان قال لها لم حذرت النمل ؟ أخفت ظلمي ؟ أما علمت أني نبي عدل ؟ فلم قلت : {حْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ} فقالت النملة : أما سمعت قولي : {وَهُمْ لا يَشْعُرُونَ} مع أني لم أرد حطم النفوس ، وإنما أردت حطم القلوب خشية أن يتمنين مثل ما أعطيت ، أو يفتتن بالدنيا ، ويشغلن بالنظر إلى ملكك عن التسبيح والذكر.)  القرطبي(


17-لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (41) سَمَّاعُونَ لِلْكَذِبِ (42)

18-« أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ( يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ) وَقَالَ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ) ». ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ ».


19-قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ24:30 

20-(العين زناها النظر, والأذن زناها السمع, واللسان زناه الكلام واليد زناها البطش-و في رواية "اللمس" - و الرجل زناها المشي ,و القلب يهوى ويتمنىو الفرج يصدق ذلك أو يكذبه) 

21-فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى 20:07

22-فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ 7:34

23-« لا يزني الزاني حين يزني وهو مؤمن ، ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ، ولا يسرق السارق حين يسرق وهو مؤمن

24-قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« يَقُولُ اللَّهُ الصَّوْمُ لِى وَأَنَا أَجْزِى بِهِ ….». رَوَاهُ الْبُخَارِىُّ

25-وأخرج الخطيب في رواة مالك عن جابر رضي الله عنه قال : كان يوسف عليه السلام لا يشبع فقيل له : ما لك لا تشبع وبيدك خزائن الأرض ؟ ! قال : إني إذا شبعت نسيت الجائع

 وأخرج البيهقي في شعب الإيمان عن الحسن - رضي الله عنه - قال : قيل ليوسف عليه السلام : تجوع وخزائن الأرض بيدك ؟ قال : إني أخاف أن أشبع فأنسى الجيعان


26-« إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِى فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِى عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِى. قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِى يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ 

سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِى ». صحيح مسلم



மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

Friday, May 26, 2017

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை !!!


ஹாமீம்! தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மானிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன. அல் குர்ஆன் 44:1, 2, 3, 4.

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா?
இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழி தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்தும் நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) கூறுகிறார்கள். (மிஷ்காத் நபி மொழி எண்: 1305 விரிவுரை மிர்காத்).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கேட்டு விட்டுக் கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும். நபிமொழி. பதிவு: பைஹகி. ஆதாரம் மிஷ்காத்: 1302.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாயகம் (ﷺ) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். “மாதங்களில் ஷஃபானில் மட்டும் நீங்கள் நோன்பு பிடிக்க மிகவும் விரும்புவதேன்?” என்று நான் அவர்களிடம் கேட்டேன் அதற்கு அண்ணலார் (ﷺ); “ நிச்சயமாக அதில் தான் அல்லாஹ் அந்த வருடம் மரணிப்பவர்களை தீர்மானிக்கிறான். என்னைப்பற்றிய தீர்மானம் வரும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்.” என எடுத்துரைத்தார்கள். பதிவு அபுயஃலா. ஆதாரம் அத்தர்கீப்: 1540.

இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிப்பார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.

“வானம் பூமி படைப்பதற்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் விதிகளை எழுதி விட்டான்.” நபிமொழிப் பதிவு. முஸ்லிம்: 2653.

குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு கேள்விக்கு நாயகம் (ﷺ) அவர்கள் பதிலளிக்கையில்; “நீங்கள் சந்திக்கப்போகும் எல்லா விஷயம் குறித்தும் (விதி) எழுதிய பேனா (மை) உலர்ந்து விட்டது. செய்யுங்கள் அல்லது செய்யாமல் போங்கள்” என்று எச்சரித்தார்கள். விதி என்பது இவ்வுலக கட்டமைப்பிற்கான அல்லாஹ் போட்ட பிளான் (திட்ட வரைவு) ஆகும். மனிதன் போட்ட பிளான் மாறும். அல்லாஹ் போட்ட பிளான் மாறாது. முடிவெடுக்கப்பட்ட இத்தீர்மான்கள் யாவும் “லவ்ஹுழ் மஹ்பூழ்” (பாதுகாக்கப்பட்ட பேழையில்), முறையாக முன்னமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் இந்த தீர்மானகளை நடைமுறைப் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான கழா கத்ரு தீர்மானங்களை நகல் எடுக்கும் பணி அதாவது லவ்ஹுல் மக்பூழிலிருந்து பிரதியெடுக்கும் பூர்வாங்க வேலைகள் இந்த பராஅத் இரவில் தொடங்கி லைலதுல் கத்ருடைய இரவில் நிறைவு பெறும். இந்த இறை திட்ட மாதிரி வடிவங்களை அது சம்பந்தப்பட்ட இறை மேலதிகாரிகளான வானவர்களிடம் புனித லைலதுல் கத்ருடைய இரவில் ஒப்படைக்கப்படும். இந்த வகையில் தான் இந்த இரண்டு இரவுகளில் காரியங்கள் தீர்மானிக்கப்பட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில விஷயங்களை அல்லாஹ் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறான். அடியான் கேட்டால் (துஆ செய்தால்) கொடுக்கலாம். அல்லது இன்ன நன்மையான செயல் அவன் புரிந்தால் இந்த பாக்கியம் அவனுக்கு வழங்கலாம். அவனது ஆயுளை நீடிக்கலாம். இரண பாக்கியம் கூடுதலாக கொடுக்கலாம். அல்லது குறைத்து விட வேண்டியதுதான், அவன் தர்மம் செய்தால் அவனுக்கு வர வேண்டிய பேராபத்துக்களை, துர்மரணகளை, துர்முடிவுகளை தடுக்கலாம் என இறைவன் தீர்மாநித்திருப்பான். அதன் படி நடந்தால் எல்லா காரியங்களும் சு(ல)பமாக நடந்தேறும். இல்லையெனில் மாறாகத்தான் நடந்தேறும். இதுமாதிரியான கழா கத்ருக்கு “கழா முஅல்லக்” என்று பெயர். இது மேற்படி விதத்தில் மாறும். “கழா முப்ரம்” முடிவான இறை விதி மாறாது.

நாயகம் (ﷺ) நவின்றார்கள்;

“விதியை, ‘துஆ’வைத் தவிர வேறு எதுவும் மாற்றாது. ஆயுளை, நன்மையை தவிர வேறு எதுவும் அதிகரிக்கச் செய்யாது. ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்.” ஆதாரம் இப்னு மாஜா: 4914.

சில விஷயங்களை அல்ல, பல விஷயங்களை நாம் கேட்டால் தான் கிடைக்கும். தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி முதல்வராக இருந்த போதுள்ள ஒரு அனுபவத்தை சொல்லவா? சில சமயம் சில காரணத்திற்காக சில மாணவர்களின் உணவு அனுமதி நிறுத்தி வைக்கப்படும். அது பட்டினி போடுவதக்கு அல்ல. வந்து கேட்டால் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். சில பேர் வீம்பிலே வீராப்புக்காட்டி விறைத்து நின்றால், மறைமுகமாக மற்ற உஸ்தாதுமார்கள், மாணவர்கள் மூலம் அவர்களை வரவழைத்து, கேட்க வைத்து, உணவு கொடுப்போம். ஏனெனில் நிர்வாக ஒழுங்குக்காக கேட்டால் தானே கொடுக்க முடியும். சட்டம் ஒழுங்கைப் பாதுக்க இந்த தந்திர முறை அவசியமாகிறது. இந்த உதாரணம், மாணவர்களுக்கு நன்றாக புரியும் என நினைக்கிறேன். குறிப்பாக எனது மஸ்லஹி பிள்ளைகள், இதை படிக்கும்போது சிரிப்பதை நன் பார்க்கிறேன். இதைப்பற்றி தங்களுக்குள் உரையாடுவதையும், நான் கேட்கிறேன். மாணவர்களுடனான இந்த சகவாசம், என்றும் பசுமையாக மலரும் நினைவுகளாக மனதில் பதிந்திருக்கும்.

நாமளாவது மாணவர்களை மறைமுகமாக மற்றவர்கள் மூலம் அழைத்து சாப்பாடு கொடுக்கிறோம். ஆனால் ஆற்றல் மிக்க அல்லாஹ் அருளாளன். நிகரற்ற அன்புடையோனின் கிருபையைப் பாருகள். இந்த பராஅத் இரவில் முதல் வானத்திற்கு அவனே வந்து, கேளுங்கப்பா, கொடுக்கிறேன், என்று (நம்முடைய பாணியில் சொல்வதாக இருந்தால் வெட்கத்தை விட்டு) கேட்கிறான் என்றால், அவன் எவ்வளவு இறக்கமுள்ளவன்? அவனே இறங்கி வந்து நம்மிடம் கேட்கச்சொல்லும் அற்புதமான இந்த அரிய வாய்ப்பை நாம் நழுவ விடலாமா? இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? ஆக பல விஷயங்களை கேட்டால்தான் கிடைக்கும். மனிதர்களிடமே இப்படி என்றால் அல்லாஹ் விடம் எப்படி அவனிடமும் சில விஷயங்களைக் கேட்டால்தான் கிடைக்கும். அப்படி இருக்கும்போது அவனிடம் கேட்பதற்கு நமக்கு என்ன யோசனை? அதுவும் அவனே கிழே இறங்கி வந்து கேளுங்கப்பா! கேட்பவர்கள் இருக்கிறீர்களா? கேளுங்கள்! நான் கொடுக்கிறேன், என்று கூவி கூவி அழைக்கும் போது, அவனிடம் கேட்க நமக்கு என்ன தயக்கம்? அப்படி என்ன வெட்கம்? அவனிடம் கேட்க நமக்கு அப்படி என்ன தலைக்கணம்? இதை ஒழிக்கத்தான் அல்லாஹ் துஆவை ஏற்படுத்தினான். மனிதர்கள் கேட்டால் கோபப்படுவார்கள். ஆனால் அல்லாஹ் கேட்காவிட்டால் கோபப்படுவான். எனவே தான் கௌதுள் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் கதிர் ஜீலானி (ரலி) அவர்கள்; “அவன் கேட்டால் தான் கொடுப்பானா? விதியில் இருந்தால் கேட்காவிட்டாலும் கொடுப்பான். விதியில் இல்லாவிட்டால் கேட்டாலும் கொடுக்க மாட்டான்.” என விதண்டாவாதம் பேசாதே! இறுமாப்புடன் தர்க்கம் செய்யாதே! உனது அடிமைத்தனத்தை (பணிவை) வெளிப்படுத்துவதற்காக அவனிடம் கேளு! துஆ செய்! கேட்ட பிறகு தான் கிடைக்கும் என்பதும் அவனது கழா கத்ரு தான் என்று நம்பு, என்று நயம் பட எடுத்துரைத்தார்கள்.

நிஸ்ஃபு ஷஃபான் என்றும், பராஅத் இரவு என்றும் அழைக்கப்படும், ஷஃபான் மாதத்தின் 15 வது இரவு விசேஷமான இரவுகளில் ஓர் இரவாகும். இப்படி, மொத்தம் 15 விசேஷ இரவுகள் உண்டு, என்று இமாம் கஸ்ஸாலி (ரலி) அவர்கள் தனது இஹ்யாவில் பட்டியலிடுவார்கள்.

நிஸ்ஃபு ஷஃபான் என்றால், ஷஃபானின் பாதி அதாவது 15 வது இரவு என்று பொருள். பராஅத் இரவு, என்றால் விடுதலை இரவு என்று அர்த்தம்.

“இந்த இரவில் கல்பு கோத்திரத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் அளவு மக்கள் அல்லாஹ்வால் நரக விடுதலை அளிக்கப்படுவார்கள்.” என்று (பைஹகி: 3837 அஹ்மது: 176). நாயகம் (ﷺ) அவர்கள் குறிப்பிடுவதிலிருந்து, பராஅத் இரவின் பெயர் காரணமும் அதன் பவர் (மகிமை) காரணாமும் புரிகிறது அல்லவா!

புனித பராஅத் இரவில் உலக முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை தொன்று தொட்டு பாரம்பரியமாக செய்து வரும் அமல்கள் (செயல்கள்) வருமாறு:-

1,     மக்ரிபுத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஸுறா ஓதி துஆ செய்வது.

2,     இஷா தொழுகைக்குப் பிறகு கப்ரு ஜியாரத் செய்வது.

3,   பஜ்ரு வரை அல்லது முடிந்த வரை நின்று, இருந்து இறை வணக்கம் புரிவது. அதாவது ‘கழா’ உள்ளவர்கள் கழாத் தொழுகைகளை நிறைவேற்றுவது, தஸ்பீஹ் நஃபீல் தொழுகை, திக்று, தஸ்பீஹ் செய்வது, குர்ஆன் ஓதுவது, இஸ்திக்ஃபார் செய்வது, ஸலவாத் ஓதுவது.

4,     அன்று பகலில் நோன்பு வைப்பது.
மகத்தான இந்த பராஅத் இரவின் சிறப்பிற்கும் இதில் இப்படி அமல் செய்வதற்கும் நபி மொழி தொகுப்பிலும் நபித்தோழர்கள், வலிமார்கள்  வாழ்விலும் நிறைய ஆதாரங்கள் உள்ளது.

“இந்த ஷஃபான் 15 வது இரவில், அல்லாஹ் தனது அடியார்களின் மீது பிரசண்ணாமாகி பாவ மன்னிப்பு கேட்போருக்கு மன்னிப்பும், அருள் வேண்டுவோருக்கு அருளும் வழங்கி, சூழ்ச்சிக்காரர்களை தள்ளியும் வைக்கிறான்” (நபிமொழி பைஹகி: 3835).

“எவர் ஐந்து இரவுகளை (இபாதத் செய்து) உயிர்பிப்பாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. 1. துல்ஹஜ் பிறை 8- மினா இரவு, 2. அர/பா இரவு, 3. ஹஜ்ஜுப்பெருநாள் இரவு, 

4. நோன்புப் பெருநாள் இரவு, 5. பராஅத் இரவு.” (நபி மொழி. ஆதாரம், அத்தர்கீப்: 1643) அதாவது சொர்க்கவாசிகளுக்குத்தான் இந்த இரவில் அமல் செய்ய தவ்/பீக் (இறை உதவி) கிடைக்கும்.

முதலில் மூன்று முறை யாஸீன் ஓதி துஆ செய்வது:-
மக்ரிபுத்தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஓத வேண்டும்.

முதல் யாஸீன் ஓதும்போது அல்லாஹ்வை வணங்கவும், நன்மைகள், தானதருமங்கள் செய்யவும், நமக்கு நீண்ட ஆயுளை சரீர சுகத்தோடு கொடுக்கும் படி நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது யாஸீன் ஓதும்போது பலா முஸீபத், நோய் நொடி, துன்ப துயரங்கள் நீங்கி நிம்மதியான சுக வாழ்வு வழங்க வேண்டி நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது முறை யாஸீன் ஓதும்போது உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் பறகத் செய்யும் படியும் மரணம் வரும் வரை யாரிடமும் கை நீட்டாமல் தேவையற்றவர்களாக நாமும் நம் சந்ததியும் வாழ வேண்டும் என்று நிய்யத் வைத்து ஓதத் துவங்க வேண்டும்.

நபிகள் நாயகம் அவர்கள் நவின்றார்கள்; ஷஃபான் 15 வது இரவு வந்தால் அந்த இரவில் நின்று வணங்குங்கள் அதன் பகலில் நோன்பு பிடியுங்கள் ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் அந்த இரவின் சூரியன் மறைந்(து பொழுது சாய்ந்)ததும் துன்யாவுடைய வானத்திற்கு இறங்கி வருகிறான் அப்போது அவன் கேட்கத்தொடங்குகிறான்.

பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா? நான் அவர்களை மன்னிப்பேன். வாழ்வாதாரம் தேடுவோர் உண்டா? நான் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவேன். பாதிக்கப்பட்டோர் உண்டா? நான் அவர்களுக்கு சுகம் அளிப்பேன், இன்னும் (எதையெல்லாம் கேட்க்க வேண்டுமோ, அதையெல்லாம்) கேட்பவர் உண்டா? நான் அதையெல்லாம் கொடுக்கிறேன் என்று ஃபஜ்ரு உதயம் (பொழுது விடியும்) வரை கேட்கிறான். (அறிவிப்பவர். அலி (ரலி) ஆதாரம் இப்னு மாஜா: 1388 மிஷ்காத்: 1306)

நபிமொழிப்படி பிறப்பு இறப்பு இந்த இரவில் தீர்மானிக்கப்படுவதால் ஆயுள் நீளமாக துஆச் செய்கிறோம், ரிஸ்க் இவ்விரவில் இறங்குவதாலும், இன்னும் “என்னிடம், ரிஸ்க் கேட்ப்போர் உண்டா?” என்று அல்லாஹ் கேட்பதாலும் ரிஸ்க் விஸ்தீரணத்திற்காக துஆச் செய்கிறோம். “முஸீபத்திலிருந்து பாதுகாப்பு கேட்போர் உண்டா?” என்று அல்லாஹ் கேட்பதால் நாம் அவனிடம் பாதுகாப்பும், சுகமும் கேட்டு துஆச் செய்கிறோம் இப்படி மக்ரிபிலிருந்து அல்லாஹ் கேட்கத்துவங்கி விடுவதால் வாய்ப்புக்கு முந்த வேண்டும் என்பதற்காகவும், “நன்மைகளை செய்வதில் இறை அருளைப் பெறுவதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 2:148. வசனத்திலும் “உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவர்கத்துக்கும் விரைந்துசெல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 3:133 வசனத்திலும் அல்லாஹ் கூறுவதற்காகவும் நாம் முந்திக்கொண்டு மக்ரிபுக்குப் பிறகே துஆச் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். முன்னதாக ஸூரா யாஸீன் ஏன் ஒதுகிறோம் என்றால், குர்ஆன் ஓதி குறிப்பாக ஸூரா யாஸீன் ஓதி துஆக் கேட்டால் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான் என்று ஹதீஸில் வந்துள்ளது. “குர்’ஆன் ஓதி அதைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்”. நபி மொழி பதிவு திர்மிதி 2917. மிஷ்காத் 2210.

மேலும் அண்ணல் நபிகள் நாயகம் (ﷺ) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்து குர்’ஆன் ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள் அவர்களைச் சூழ்ந்துகொள்வர். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுதுக்கூறுகிறான்”. பதிவு- முஸ்லிம் 2699. அபூ தாவூத் 1455.

மலக்குகள் இறங்கி இருக்கும் மஜ்லிஸில்- கூட்டத்தில் துஆக் கேட்டால் அதை அல்லாஹ் கபூலக்குவான். “சேவல் கூவும் சப்தம் கேட்டால் நீங்கள் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள் ஏனெனில் அது மலக்கைக்கண்டு தான் கூவும்”. நபி மொழி புகாரி 3303. முஸ்லிம் 2729. இந்த நபி மொழி மலக் இருக்கும்போது துஆச் செய்வதை பரிந்துரைக்கின்றது என்றால் அப்போது அது கபூலாகும் என்பதால்தானே!. “குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” என்று புகாரி ஷரீபிலும் முஸ்லிம் ஷரீபிலும் ஹதீஸ் வந்துள்ளது. குர்ஆன் ஓதிய பின்னர் மலக்குகள் இருக்கும்போது துஆக் கேட்டால் அது கபூலாகும் என்றால் பத்து முறை குர்’ஆன் ஓதியதற்குச்சமமான யாஸீன் ஓதி துஆச் செய்தால் அது கபூல் ஆகாதா? “ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். (நபி மொழி. திர்மிதி: 2887).

“எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).

“யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் (தாரமி) ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் (மக்ரிப்) துஆவை நாம் கேட்டு வருகிறோம்.

மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது., ஹழ்ரத் உமர பின் கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்

அல்லாஹும்ம இன் குந்த கதப்தனா அஷ்கியாஅ ஃபம்ஹுஹு வக்துப்னா சுஅதாஅ வஇன் குந்த கதப்தனா சுஅதாஅ ஃபஅஸ்பித்னா ஃபஇன்னக தம்ஹு மா தஷாஉ வதுஸ்பிது வஇன்தக உம்முல்கிதாப்

(யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).

இந்த துஆவை ஷாஅபான் 15 ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்)

பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம்.

நாம் ஓதும் பராஅத் துஆவின் மிகுதமான வாசகம் ஹதீஸிலிருந்து பெறப்பட்டதாகும் இமாம் சுயூதி அவர்கள் அத்துர்ருள் மன்சூர் என்ற அவர்களின் தப்சீரில் 13:39 என்ற வசனத்தின் விளக்க உரையில் கூறுகிறார்கள்; இப்னு அபீ ஷைபா அவர்கள் தனது அல்முசன்னஃப் என்ற ஹதீஸ் கிரந்தத்திலும் இப்னு அபித்துன்யா அவர்கள் தனது அத்துஆ என்ற ஹதீஸ் தொகுப்பிலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள் எந்த அடியான் இந்த (பராஅத்) துஆக்களை ஓதுவாரோ அல்லாஹ் அவருடைய வாழ்க்கையில் அவருக்கு வளப்பத்தை ஏற்படுத்துவான்.

“ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான். (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” (அல் குர்ஆன். 13:38,39).

“எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளைச் சேர்த்துக்கொள்ளட்டும்” நபி மொழி. புகாரி: 5986. முஸ்லிம்: 1982. சில அறிவிப்புகளில்., “அல்லாஹுவைப் பயந்து கொள்ளட்டும் தனதுபெற்றோரை மதித்து அவர்களுக்கு நன்மை செய்யட்டும்” என்று கூடுதலாக வந்துள்ளது. இந்த நபிமொழியில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.

“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை (வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று 6:2-ல் கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு (அஜலை) தவணையைக் குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை (மறுமையில்) சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும். ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) வழங்கினார்கள் (தப்ஸீர் குர்துபி. 13:39 விரிவுரை)

பராஅத் இரவில் கப்று ஜியாரத்:-
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்., ஒருநாள் இரவு அண்ணல் நபி (ﷺ) அவர்களைக் காணாமல் தேடி அலைந்த போது இறுதியில் அவர்கள் ஜன்னத்துல் பகியி (மதீனா கபுறுஸ்தானி)ல் நின்று உருக்கமாக துஆச் செய்து கொண்டிருந்தார்கள். எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம். நான் (எனது) உலக நலனில் அக்கறை கொண்டு (தேடிவந்து)ள்ளேன். ஆனால் நாயகமே தாங்களோ (மக்கள் நலனுக்காக) உங்கள் இறைவனிடம் தேவையாகி நிற்கிறீர்களே! (என மெய்சிலிர்த்தேன்) அங்கிருந்து வேகமாக கிளம்பி எனது அறைக்கு வந்து சேர்ந்தேன் வேகமாக நடந்து வந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது எனக்குப்பின் எனது இல்லம் வந்து சேர்ந்த சர்தார் நபி (ﷺ) அவர்கள் இதைக் கவனித்து விட்டு, இதென்ன ஆயிஷா! இப்படி மூச்சு வாங்குது? என வினவினார்கள். அதற்கு, நான் அவர்களைக் காணமல் தேடி அலைந்து இறுதியில் ஜன்னத்துல் பகியில் கண்டு பிடித்து பிறகு மிக வேகமாக இல்லம் திரும்பிய கதையை அவர்களிடம் சொன்னேன். “என்ன ஆயிஷா! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து இது ஷ/பான் 15-வது இரவு. இதில் அல்லாஹ் அடியார்களுக்கு விடுதலை அளிக்கிறான் எனக்கூறினார்கள்”. (எனவே அடியார்களுக்கு மன்னிப்பும் நரக விடுதலையும் கிடைக்க துஆ செய்வதற்காக கபுறு ஜியாரத்திற்கு வந்தேன்). ஆதாரம்.  பைஹக்கி 3837 இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் புரிகிறது அல்லவா!.

பராஅத் இரவின் இபாதத்- இறைவணக்கம்:
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றாகள்; கபுற் ஜியாரத் முடித்து விட்டு இல்லம் திரும்பிய கண்மணி நாயகம் (ﷺ) அவர்கள், ஆயிஷா!  இன்றிரவு நின்று வணங்க எனக்கு அனுமது அளிப்பீர்களா? என்று என்னிடம் வினவினார்கள் அதற்கு நான், “எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம் தாங்கள் என்னுடன் எனக்கருகே இருப்பதைத் தான் விரும்புகிறேன் ஆனாலும் உங்களது விருப்பத்தை தேர்வுசெய்கிறேன்” எனக்கூறினேன் உடன் எழுந்து தொழ ஆரம்பித்துவிட்டார்கள் நீண்ட நெடிய நேரம் தொழுகையில் சுஜீதிலேயே இருந்தார்கள். எந்த அளவு நீளமான சுஜீது செய்தார்கள் என்றால் நான் அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டு விட்டதோ என்று கருதிவிட்டேன். எழுந்து போய் அவர்களின் பாதத்தை தொட்டபோது அதில் உயிர்த்துடிப்பு இருந்தது. அப்போது தான் எனக்கு சந்தோசமே வந்தது சுஜீதில் அவர்கள் ஓதியதை நான் கவனித்துக் கேட்டேன்;

“அஊது பிஅஃப்விக மின் இகாபிக வஅஊது பிரிழாக்க மின் சகத்திக வஅஊது பிக மின்க இலைக்க ஜல்ல வஜ்ஹுக லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அந்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக”

(யா அல்லாஹ் உனது மன்னிப்பைக்கொண்டு உனது தண்டனையை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உனது திருப்பொருத்தத்தை கொண்டு உனது கோபத்தை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உன்னைக்கொண்டு உன்னைவிட்டும் உன்னளவில் பாதுகாபுத்தேடுகிறேன் உனது திருமுகம் மகத்தானது நீ உன்னை புகழ்ந்ததைப்போல நான் உன்னைப் புகழ இயலாதவனாக இருக்கிறேன்)

நான் இவ்வாறு செவிமடுத்ததை காலையில் நபி (ﷺ) அவர்களிடம் கூறினேன் அதற்கு அவர்கள், ஆயிஷா! இதைக் கற்றுக்கொண்டாயா (நல்லது) இதைக் கற்று, கற்றுக்கொடுங்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள், இவ்வாறு இதைக் கற்றுக்கொடுத்து இதை சுஜூதில் திரும்பத் திரும்ப மடக்கி மடக்கி கூறிக்கொண்டிருக்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள்.

ஆகவே, இதை நாமும் கற்று மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம். பராஅத் இரவில் சுஜுதில் இருந்துகொண்டு இதை நாமும் கூறிக்கொண்டிருப்போம்.

பராஅத் நோன்பு:
இதற்கு மூன்று விதமான சிறப்புகள் இருக்கிறது

1,     இது ஷ/பான் மாதத்தின் நோன்பு. பொதுவாக, “நாயகம் (ﷺ) அவர்கள் ரமழானுக்கு அடுத்து ஷஃபானில் தான் அதிகம் நோன்பு பிடிப்பார்கள். சில சமயம் ஷஃபான் முழுதும் நோன்பு வைப்பார்கள்” புகாரி: 1969. முஸ்லிம்: 1156.
“ரமழானையும் ஷஃபானையும் தவிர தொடர்ந்து இரண்டு மாதம் நபி (ﷺ) அவர்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லை” என்று உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் திர்மிதி: 1836.

ஷஃபானில் நீங்கள் நோன்பு பிடிக்கும் அளவு மற்ற மாதங்களில் நீங்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லையே? என, உசாமா (ரலி) அவர்கள் கேட்டபோது, “ரஜபுக்கும் ராமழனுக்கும் இடையில் இருக்கும் இந்த (ஷஃபான்) மாத(த்தின் மகத்துவ)த்தை மக்கள் உணராமல் உள்ளனர். இது அகில உலக இரட்சகனிடம் அமல்கள் உயர்த்தப்படும் ஒரு மாதம். நான் நோன்பளியாக இருக்கும்போது எனது அமல்கள் உயர்தப்படுவதை நான் விரும்புகிறேன்”. என உத்தம நபி (ﷺ) அவர்கள் பதில் அளித்தார்கள். நசயி: 210/4

2,     இது அய்யாமுல் பீழுடைய (13 ,14, 15 ஆகிய வெளுப்பு) நாட்களில் ஒன்று. இந்த மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும். “ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” நபிமொழி புகாரி: 1979. முஸ்லிம்: 1159. “நாயகம் (ﷺ) அவர்களின் இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வசனத்தை குர்ஆனில் அல்லாஹ் இறக்கினான்” என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).
(அதாவது 3 x 10 = 30 x 12 = 360) (திர்மிதி: 762 நசயி: 219/4)

3,     பராஅத் நோன்பு. நாயகம் (ﷺ) அவர்கள் நவின்றார்கள்., “ஷ/பான் 15-வது இரவு வந்தால் நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு பிடியுங்கள்” (இப்னு மாஜா: 1388)
இப்படி, சாந்த நபி (ﷺ) அவர்கள் முழுமையாக அல்லது அதிகமாக நோன்பு வைக்கும் ஷஃபான் மாதத்தின் வெளுப்பு தினமான 15ல் வரும் பராஅத் நோன்பு பொதுவாகவும் குறிப்பாகவும்  நோன்பு வைப்பது ஏற்றம் நிறைந்த நபி மொழியும் வழியும் ஆகும்.

பராஅத் இரவில் பாக்கியமிழக்கும் பாவிகள்:
“ஷஃபான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்” என்று அறிவித்த அண்ணலார் (ﷺ) அவர்கள் இதில் விதி விலக்கானவர்களையும் பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
1, இறை மறுப்பாளர்கள்
2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
4, தற்கொலை செய்தவர்கள்
5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
6, தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
7, குடிகாரர்கள்
8, கரண்டைக்குகீழே உடை உடுத்தி இருப்பவர்கள்
9, சதிகாரர்கள்
10, சூனியம் செய்பவர்கள்

·                     குறிப்பு; முப்தி தகி உத்மானி அவர்கள் கூறுகிறார்கள்:

·    பராஅத் சம்மந்தமான அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீ/பானதுதான். என்றாலும் அதிகமான பல அறிவிப்பாளர்கள் தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான ஃபுகஹாக்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள்.

·      பராஅத் சம்பந்தமான ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

·     பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்செய்வது கூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து

·       இதல்லாமல் காலங்களில் சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத் இரவு விசேஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆகவே இதை பித்அத் என்று பிதற்றுவதோ, இது அடிப்படை அற்ற விசயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ தவறானதாகும். எனவே சரியான விஷயம் என்னவென்றால் இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருவதாகும். (இஸ்லாஹீ குத்பாத்).

அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் தனது மிர்க்காத் (மிஷ்காத் விரிவுரை) யில் கூறுகிறார்கள்,. லயீஃ
பான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வது கூடும். பராஅத் இரவில் விஷேசமாக இபாதத் செய்வதை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. அந்த ராத்திரியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் செய்வதைத்தான் மறுக்கிறார்கள்.

“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” (அல் குர்ஆன்: 96:9,10)

காண்க: மிஷ்காத் ஹதீஸ் எண்: 1308 விரிவுரை மிர்காத்.

பராஅத் போன்ற சிறப்பான இரவுகளில் தொழுகின்ற அடியார்களை தடைசெய்கின்றவர்களைக் குறித்து அன்றே அல்லாஹ் அடையாளப் படுத்தி இருப்பதைப் பார்த்தீர்களா? வஸ்ஸலாம்.....


என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )