Thursday, July 28, 2016

யார் இந்த தலைமை காஜி !!!



அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாயத் என்று அழைக்கப் படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது. இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப் பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப் பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும்,இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை 
நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது,பார்சி,அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன்,மார்க்க,வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.

கடைசியாக விஷயத்துக்கு வருவோம். தமிழக காஜியின் பத்வா அடிப்படையிலிலேயே தமிழக முஸ்லிம்கள் தங்கள் பெருநாள்களை கொண்டாடி வருகின்றனர். சுன்னத் வல் ஜமாத்இனரின் எந்த பத்வாவையும் ஏற்காத மாறாக முஷ்ரிக்குகள் என்று தங்கள் கருத்துக்களை ஏற்காத சுன்னத் ஜமாத்தினரையும் பிற அமைப்புகளை சார்ந்த முஸ்லிம்களையும் தூற்றி வரும் ததஜ அமைப்பினர் பிறை விஷயத்தில் தங்கள் விருப்பத்துக்கு தலைமை காஜியை பத்வா கொடுக்க வேண்டும் என நினைப்பதும், அவ்வாறு நடக்கவில்லையென்றதும் தலைமை காஜியின் வயதையும் அவர் மார்க்க அறிஞர் என்பதையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக ஏசி வருவதையும் சகிக்க முடியவில்லை.

இறுதியாக தலைமை காஜியை மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்களுக்கு தெரியும் அவர் மிக,மிக எளிமையானவர், மக்கள் எளிதில் அணுகக் கூடியவர் அது மட்டுமல்ல எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர்.தான் வகிக்கும் பொறுப்புக்காக அரசிடம் இருந்து சம்பளமோ,சலுகைகளோ பெறாதவர்.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். தமிழகத்தின் ஒரு கோடி முஸ்லிம்களும் தலைமை காஜிக்கு ஆதரவாக உள்ளனர். ததஜ வினரின் நிர்பந்தத்துக்கு அரசு இணங்கினால் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லி வைக்கிறோம்.


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment