Friday, January 11, 2013

தவறு செய்யனுமா? தாராளமாக! ஆனால்....?




பல்கு நாட்டுப் பேரரசராக இருந்து முடி துறந்த இறை ஞானி இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வழிகெட்ட ஒரு இளைஞன் வந்து,நான் வரம்பு மீறி நடந்துவிட்டேன்.பல பாவச் செயல்கள் புரிந்து விட்டேன் அதற்காக இப்போது மனம் வருந்துகிறேன். ஆனால் பாவத்தை விட்டும் விலகி வாழ வழி தெரியாமல் வகையற்று உங்கள் முன் வந்து நிற்கிறேன்.நான் திருந்தி வாழ வழி சொல்லுங்கள் எனக்கேட்டு நின்றார்.

அதற்கு ஞானி மகான் அருளிய உபதேசம் இதோ.நீ ஐந்து காரியம் செய்ய சக்தி பெற்றிருந்தால்,தாராளமாக நீ தவறு செய்யலாம்.முதலாவது '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனது ரிஸ்க் -- உணவு எதையும் சாப்பிடாதே!'' இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அவ்வாலிபன், '' அது எப்படி முடியும்? எது சாப்பிட்டாலும் அது அவனுடைய ரிஸ்க் -- உணவுதானே! அப்படியானால் அவனுடைய உணவையும் உண்டு விட்டு அவனுக்கே மாறு செய்வது உனக்கு நியாயமா? உண்ட வீட்டுக்கு இது இரண்டகமல்லவா? '' 

ஆம்!  நியாயமில்லைதான்.இரண்டாவது உபதேசத்தைக் கூறுங்கள்''. '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய எந்த நாட்டிலும் -- இடத்திலும் தங்காதே! அவனுடைய நாட்டை -- இடத்தை விட்டும் முதலில் வெளியேறிவிடு.'' முன்பை விட இப்போது அதிர்ச்சி அடைந்த அவ்வாலிபன்,எங்கு இருந்தாலும்,சென்றாலும்,எல்லாம் அவனுடைய நாடாக -- இடமாக இருக்க,இது எப்படி சாத்தியமாகும்.என்னப்பா! அப்படியென்றால் அவனுடைய நாட்டில் - இடத்தில் இருந்து கொண்டே அவனுக்கு எதிராக பாவம் செய்யப் போகிறாயா? '' 

இல்லை.இல்லை செய்யமாட்டேன் செய்யவும் கூடாது,'' சரி சரி மூன்றாவது உபதேசம் சொல்லுங்கள்.நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய எண்ணினால் அவனுக்குத் தெரியாமல்,அவன் பார்க்காத இடமாகப் பார்த்து அங்கு போய் பாவம் செய்! ''  '' இது எப்படி முடியும் அவன் பார்வை படாத இடமே இவ்வுலகில் இல்லையே! அவன் அந்தரங்கங்களை அறிந்தவனாயிற்றே.'' நிச்சயமாக அவன் ரகசியத்தையும், அதை விட மறைவாக (மனதில்) இருப்பதையும் அறிகிறான்.'' (அல்குர்ஆன் 20 ; 7)

கும்மிருட்டில்,கறுப்புப் பாறையில் ஒரு கறுப்பு எறும்பு ஊர்ந்து போவதையும்,அவன் பார்ப்பவனாயிற்றே! '' அப்படியானால் அவன் பார்க்கிறான் என்று தெரியவே நீ அவனுக்கு மாறு செய்யலாமா நீ தனியறையில் யாருக்கும் தெரியாமல் தவறாக நடக்க முற்படும் போது, அந்த அறையினுள்ள ஒரு துவாரத்தின் வழியாக யாரோ ஒரு ஆள் உன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தால்,உன்னால் அங்கு தவறு செய்ய முடியுமா ? உனது உடம்பில் டெம்பரேச்சர் அப்படியே இறங்கிவிடாது! ஆம்! நீ வியர்த்து விறு விறுத்துப் போவாய்.உன்னால் அப்போது எந்த தவறும் செய்ய முடியாது.அப்படியானால் உன்னைப் போல ஒரு மனிதன் பார்க்கவே, தவறு செய்ய வெட்கப்படுபவன்,உன்னைப் படைத்த இரட்சகனாம் அல்லாஹ் பார்க்கின்றான் எனத் தெரிந்தும் வெட்க மில்லாமல் அவனுக்கு முன்னால் பாவம் செய்யலாமா ? இது தகுமா ?
கூடவே கூடாது! நான்காவதைக்கூறுங்கள்'' உனது உயிரைக் கைப்பற்ற மலக்குல் மவ்த் -- மரண தூதன் உன்னிடம் வந்தால் அவரிடம் கெஞ்சித் கூத்தாடி கொஞ்சம் டைம் -- தவனை கேள்! தௌபா -- பாவ மன்னிப்புக் கேட்டு மீட்சி பெறுவதற்கு ''

'' அது நடக்கவே நடக்காதே '' அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள் '' (அல்குர்ஆன் 7 ; 34) 
என்று அல்லாஹ் கூறுகின்றானே.

'' மரணத்தை தள்ளி வைக்க முடியாது என்று தெரிந்திருக்கும் நீ, பாவத்தில் மூழ்கியிருக்கும் போது உனது மரண நேரம் வந்து விட்டால் உனது கதி என்னவாகும்''? '' விபச்சாரம் செய்பவன் அவன் விபச்சாரம் செய்யும் போது அவன் முஃமினாக -- இறை விசுவாசியாக இருக்கமாட்டான்.திருடன் திருடும்போது அவன் முஃமினாக இருக்க மாட்டான்.குடிகாரன் குடிக்கும்போது முஃமினாக இருக்கமாட்டான் '' (புகாரி ; 2475, முஸ்லிம் ; 57) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.ஈமானின் -- இறை நம்பிக்கையின் -- பிரகாசம் உன்னை விட்டும் விலகி இருக்கும் போது உனக்கு மரணம் வந்தால் உன் நிலை என்னவாகும்?

'' ஆகா! ரொம்ப ஆபத்தாகும்.ஐந்தாவது காரியத்தையும் கூறிவிடுங்கள்.''
நரகத்தின் காவலர்களான சபானிய -- மலக்குமார்கள்,வானவர்கள் உன்னை நரகத்திற்கு இழுத்துச் செல்ல உன்னிடம் வந்தால் நீ அவர்களுடன் போகாதே!''

இதுவெல்லாம் நடக்கக்கூடியதா? ஒருக்காலும் நடக்கமுடியாத காரியம்,எனக்கூறி அழ ஆரபித்த அவ்வாலிபர் முடிவில் போதும் போதும் ..... மகான் அவர்களே! நான்  இஸ்திஃக்பார் -- பாவ மன்னிப்பு அல்லாஹ்விடம் கேட்டு,அவனிடமே தௌபா -- மீட்சி பெறுகிறேன்.எனக்கூறி விடைபெற்றார்.

அதற்குப் பிறகு அவர் திருந்தி வாழ்ந்து இறை வணக்கத்திலே முழுமையாக ஈடுபட்டு இறை நேசரானார்.உண்மையான கடவுள் நம்பிக்கையாளன் ஒரு போதும் பாவம் செய்யவே மாட்டார்.அவனது கடவுள் மெய்யாகவும்,அவனது நம்பிக்கை உண்மையாகவும் இல்லாத போதுதான் அவன் பாவம் செய்ய முற்படுகின்றான்.

மெய்யான கடவுளின் வரைவிலக்கணம் அவன் அகிலங்களின் அதிபதி.அவனே படைத்தவன்.உணவளிப்பவன்.எங்கும் நிறைந்த அவனது ஞானம்,பார்வை படாத இடமே இல்லை.அவனுக்கு எங்கும் எதுவும் மறைவானது இல்லை.அவன் ஏகன் இணை துணையற்றவன்.அத்தகய அல்லாஹ்வின் பேரருள் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக! ஆமீன்!!! வஸ்ஸலாம்..

என்றும் தங்களன்புள்ள





மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்

0 comments:

Post a Comment